Fri. Feb 27th, 2026

🚨 சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக ஆபத்தான நிலையில் மின்கம்பம்.

‼️ “விபத்து நடந்த பிறகா நடவடிக்கை?” – கொந்தளிக்கும் இணையம் பொதுமக்கள்.

கன்னியாகுமரி – ஜனவரி 27.

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, இணையம் புத்தன் துறை ஊராட்சிக்கு உட்பட்ட இணையம் சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக அமைந்துள்ள மின்கம்பம், தற்போது ஆபத்தான நிலையில் பழுதடைந்து, சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.

தினந்தோறும் சொத்து பதிவுகள், ஆவணப் பணிகள், சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட தேவைகளுக்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த அலுவலகத்திற்கு வருகை தரும் நிலையில், அவர்களின் தலைக்கு மேலே தொங்கும் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மழைக்காலங்களில் மின் கம்பத்தின் அடிப்பகுதி மேலும் தளர்ந்து, மின்சார கசிவு ஏற்பட்டு பெரும் விபத்து நிகழ வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் பெண்கள், முதியோர், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கடும் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

⚠️ “அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிருக்கு ஆபத்து”

பலமுறை புகார் அளித்தும் இதுவரை மின்சார வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.

“விபத்து நடந்த பிறகு மட்டும்தான் அதிகாரிகள் விழிப்பார்களா?” என கேள்வி எழுப்பும் பொதுமக்கள், உடனடியாக பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

✊ சமூக ஆர்வலர்களின் கடும் எச்சரிக்கை:
இந்த விவகாரம் குறித்து நேஷனல் விஜிலென்ஸ் கவுன்சிலிங் ஆப் இந்தியா அமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட இயக்குனர் J. ராஜேஷ்கமல் அவர்கள்,

“பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அலட்சியம் காட்டக் கூடாது. உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்”
என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

❓ மாவட்ட நிர்வாகம் கண் திறக்குமா?

மின்சார வாரியமும், மாவட்ட நிர்வாகமும் இந்த ஆபத்தான நிலையை உடனடியாக சரிசெய்து, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வார்களா?
அல்லது ஒரு விபத்து நடந்த பிறகே நடவடிக்கை எடுப்பார்களா? என்ற கேள்வி தற்போது இணையம் பகுதியில் எழுந்துள்ளது.

R. சுதாகர்

துணை ஆசிரியர்.

By TN NEWS