Thu. Feb 5th, 2026

பள்ளிகொண்டா, பிப். 04:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள காப்புக்காட்டில் தீ வைத்த நபரை வனத்துறையினர் கைது செய்தனர். இந்த நடவடிக்கை, மாவட்ட வன அலுவலர் டி.கே. அசோக்குமார் மற்றும் வேலூர் வனக்கோட்ட அலுவலரின் உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்டது.

வனப்பகுதியில் தீ – தகவலின் அடிப்படையில் விசாரணை.

நேற்று மாலை, வேலூர் வன சரகத்திற்குட்பட்ட பள்ளிகொண்டா பீட் காப்புக்காடு, முருகன் கோவில் வழி சரகத்தில் தீ பற்றவைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, பள்ளிகொண்டா பிரிவு வனவர் அப்துல் ரகுமான், பீட் வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டயனர்.

தீ வைத்த நபர் கண்டுபிடிப்பு.

விசாரணையில், கரடிகுடி ஊராட்சி, கொல்ல மேடு தாங்கல் பகுதியைச் சேர்ந்த கணேசன் (33), தந்தை ராமமூர்த்தி, அணைக்கட்டு தாலுகா, வேலூர் மாவட்டம் என்பவர் காப்புக்காட்டில் தீ வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மாடுகளை மேய்ப்பதற்காக அடிக்கடி காப்புக்காட்டிற்குள் செல்வது வழக்கம் என்றும், பழைய புல்கள் மேய்ந்த நிலையில் புதிய புல்கள் முளைக்க வேண்டும் என்ற நோக்கில் தீ வைத்ததாகவும் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

வன குற்ற வழக்கு – நீதிமன்ற காவல்.

இதனைத் தொடர்ந்து, பல்வகை வன குற்ற வழக்குகளின் கீழ் கணேசன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வேலூர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

வனத்துறை எச்சரிக்கை.

காப்புக்காடுகளில் தீ வைப்பது கடுமையான குற்றம் என்றும், இது வன உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

செய்தி :
குடியாத்தம் தாலுக்கா
கே.வி. ராஜேந்திரன்
(தாலுக்கா செய்தியாளர்)

By TN NEWS