Mon. Mar 23rd, 2026

300 கிலோ செம்மர கட்டைகள் பறிமுதல் – 2 பேர் தப்பி ஓட்டம், 2 பேர் காயம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாக செம்மரம் கடத்தி வந்த கார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

ஆந்திர மாநில வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பரதராமி அருகே சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது, கார் நிற்காமல் வேகமாக தப்பிச்சென்றது.

அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாக்கம் கிராமம் வழியாக அதிவேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

காரில் இருந்த நான்கு பேரில் இருவர் சம்பவ இடத்திலேயே குதித்து தப்பிச் சென்றனர். மீதமுள்ள ராஜி மற்றும் அவருடன் வந்த மற்றொருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்குமாடி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

விபத்தில் சுமார் 300 கிலோ எடையுடைய செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்

By TN NEWS