Fri. Feb 6th, 2026

🔹 தவறான ஸ்கேன் ரிப்போர்ட் – உடல்நலம் பாதிப்பு.

திருத்துறைப்பூண்டி ஹனிபா மருத்துவமனையில் சிந்தாமணிக்கு வழங்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட், மற்றொரு நபரின் அறிக்கையாக இருப்பது பின்னர் தெரியவந்தது. அந்த தவறான ரிப்போர்ட்டின் அடிப்படையில் மருந்துகள் வழங்கப்பட்டதால், அவரது வயிற்றுவலி மேலும் தீவிரமடைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டது.

🔹 மூத்த குடிமகளின் சட்டப் போராட்டம்.

கல்வியறிவற்ற மூத்த குடிமகளான சிந்தாமணி, உரிய பதில் கிடைக்காததால் சட்ட வழிமுறையைத் தேர்ந்தெடுத்தார். மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு பின்னர் வழக்கறிஞர் மூலம் சட்ட நோட்டீஸ் அனுப்பி, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

🔹 மருத்துவ அலட்சியம் நிரூபணம்.

வழக்கை விசாரித்த திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம், ஸ்கேன் ரிப்போர்ட் மாற்றம் போன்ற முக்கிய தவறு, மருத்துவரின் கவனக்குறைவை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டது. இது நோயாளியின் உடல்நலத்திற்கு நேரடி ஆபத்தை ஏற்படுத்தும் செயல் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
🔹 மருத்துவமனை வாதம் நிராகரிப்பு.

“தவறு விரைவில் சரிசெய்யப்பட்டது; வாய்மொழியாக தகவல் தெரிவித்தோம்” என்ற மருத்துவமனை தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. மருத்துவ சேவைகளில் வாய்மொழி அறிவுறுத்தல் போதுமானதல்ல என்றும், எழுத்துப்பூர்வ ஆவணங்கள் அவசியம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

🔹 நஷ்டஈடு வழங்க உத்தரவு.

மருத்துவர் அபு ஹனீஃபா கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்ட சிந்தாமணிக்கு ரூ.35,000 நஷ்டஈடும், ரூ.10,000 வழக்குச் செலவுத் தொகையும் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

🔹 தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை.

இந்த தீர்ப்பு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் சென்டர்கள் நோயாளி பதிவுகள், பரிசோதனை அறிக்கைகள் குறித்து கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

R. Sudhakar

Sub Editor

Tamilnadu Today Magazine Network

By TN NEWS