Sat. Jan 10th, 2026

பெரம்பலூர் | ஜனவரி 7

தமிழ்நாடு அரசு சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பரிசுத் தொகுப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.3,000 ரொக்கம் மற்றும் வேட்டி, சேலைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

அரசின் அறிவிப்பின்படி, இந்த பொங்கல் பரிசு தொகுப்பு 08.01.2026 முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்கப்படுகிறது. தினமும் காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை மற்றும் பிற்பகல் 2.00 மணி முதல் 6.00 மணி வரை, பகுதி வாரியாக வழங்கப்பட்ட டோக்கன் அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக 09.01.2026 அன்று நியாய விலைக் கடைகளுக்கு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,93,921 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில், மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : சதீஷ்
பெரம்பலூர்

By TN NEWS