பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
விழுப்புரம் மாவட்டம், மேல் மலையனூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
அன்றைய தினம் காலை முதலே மூலவருக்கும், உற்சவ அம்மனுக்கும் பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட புனிதப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் மூலவர் அங்காளம்மனுக்கு தங்கக் கவசமும், உற்சவத் தாயாருக்கு மலர் அலங்காரமும் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளல்;
இரவு 11 மணியளவில் பம்பை, உடுக்கை, மங்கள மேள இசை முழங்க, பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ அங்காளம்மன், மைந்தர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் வடக்கு வாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்கருணை புரிந்தார்.
அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி, சூடமேற்றி, உள்ளம் உருகி அம்மனை வழிபட்டனர். ஆலய பூசாரிகள் அம்மன் தாலாட்டு பாட, பக்தர்கள் பலர் பரவசமடைந்து ஆடினர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த ஊஞ்சல் உற்சவம், தீபாராதனையுடன் நிறைவு பெற்றது.
ஏற்பாடுகள் & பாதுகாப்பு;
இந்திய சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் சேட்டு (எ) ஏழுமலை, குழு உறுப்பினர்கள் மதியழகன், சுரேஷ், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளர் மணி, காசாளர் சதீஷ் உள்ளிட்டோர் உற்சவ ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு கருதி 250-க்கும் மேற்பட்ட காவலர்கள், தீயணைப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
📌 விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்: மதியழகன்