Mon. Aug 18th, 2025

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு செல்போன் மூலம் கஞ்சா சப்ளை செய்து வந்த 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

குடியாத்தம் நகரில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், மொபைல் மூலம் தொடர்பு கொண்டால் நேரில் சென்று கஞ்சா பொட்டலங்களை வழங்குவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில், டவுன் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான தனிப்படை மற்றும் மாவட்ட போலீஸ் தனிப்படை இணைந்து சோதனை நடத்தினர்.

நேற்று மாலை குடியாத்தம் அரசு கல்லூரி பின்புறம் திடீர் சோதனை நடைபெற்றது. அப்போது காருடன் நின்றிருந்த 2 பேரை போலீசார் விசாரித்ததில், அவர்கள்

பாசில் (34) – தரணம் பேட்டை ஆலியார் தெரு, அமீன் மகன்சல்மான்கான் (20) – பேரணாம்பட்டை அருகே ஏரிகுத்திமேடு, ஆசத்கான் மகன் என்பது தெரியவந்தது. இவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி சிறு பொட்டலங்களாக மாற்றி விற்பனை செய்து வந்ததும், செல்போன் மூலம் ஆர்டர் பெறுவதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் 190 கிராம் கஞ்சா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

– கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம்

தாலுக்கா செய்தியாளர்

By TN NEWS