வானொலியின் காலம் என ஒன்று இருந்தது.
90-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு அதைப்பற்றி தெரியாமல் இருக்கலாம் ஆனால் 90-க்கு முன் பிறந்தவர்களுக்கு வானொலி என்பது ஒவ்வொரு வீட்டின் பொக்கிசம் என தெரியும்.
டெல்டாகாரர்களுக்கு பரீட்சயமான ஒலிபரப்புகள்,திருச்சி வானொலி,விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு,இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம்.
எங்க வீட்டில் இருந்த ரேடியோ,கலைஞர் டிவி சைசுக்கும் சற்று சின்னதாக கொஞ்சம் நீளமாக இருக்கும்.
இரண்டு திருகுகள்.சவுண்ட் வைக்க ஒன்று மற்றொன்று ஸ்டேசன் மாற்ற!
மாலை நேரங்களில் ரேடியோ அப்பாவின் கட்டுப்பாட்டிற்கு வந்து விடும்.
“மண்ணையெல்லாம் பொன்பொழிக்க செய்திடுவோம்,அதை பன் மடங்கு உற்பத்தியை பெருக்கிடுவோம்”என இரவு ஏழு மணிக்கே திருச்சி வானொலியில் உழவர் உலகம் நிகழ்ச்சி ஆரம்பித்து விடும்.
“தற்போது சம்பா சாகுபடியில் குருத்து பூச்சிகள் தென்படுகிறது விவசாயிகள் ஒரு டேங்குக்கு ஐம்பது மில்லி வீதம் மொத்தம் பதினைந்து லிட்டர் தண்ணீரில்..,”என விவசாய ஆலோசனைகளை சொல்லி கொண்டு இருப்பார்கள்.
“இதெல்லாம் வேலைக்கு ஆகாதுடா தம்பி நம்மதான் வயல பார்த்து அதற்கு தகுந்த மாதிரி மருந்து அடிக்கனும்”என்பார் அப்பா!
அதுவும் வெள்ளிக்கிழமை இரவு விஞ்ஞானம் வீராச்சாமி என்ற நிகழ்ச்சி போடுவார்கள் அதை கேட்கும் போதே மனதில் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்.
“விஞ்ஞானம் வீராச்சாமி நானும் வந்தேனே”பாடலுடன் ஆரம்பிக்கும் நிகழ்ச்சி!
இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு காரணம் மறுநாள் சனி,ஞாயிறு பள்ளி விடுமுறை!
சரியாக காலை,மாலை ஆறரை மணிக்கு சென்னை அஞ்சலில்,”செய்திகள் வாசிப்பது செல்வராஜ் “என செய்திகள்,
காலை,இரவு 7-15 க்கு டெல்லி அஞ்சலில்,”செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சாமி”என ஆண்மை கலந்த குரல் வழி செய்திகள் நம்மை பரபரப்புக்குள்ளாகும்.
தேன் கிண்ணம்,இலங்கை வானொலி பாடல்கள் என எப்போதும் வானொலிகள் சுவராசியத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும்.
பிடித்த பாடலை நினைத்த நேரத்தில் கேட்பதை விட,அடுத்த பாடல் என்னவென்று தெரியாமல் திடீரென நமக்கு பிடித்த பாடல் வரும் போது வருமே ஒரு உற்சாகம் அதைவிட வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்.
வாழ்வின் சுவாரசியம் என்பது திடீர் திடீர் என நம்மை ஏதோ ஒன்று மகிழ்ச்சி படுத்திக்கொண்டே இருப்பது ஆகும்.
அதை இன்றைய நவீன வாழ்வில் எதனாலும் கொடுக்க முடியவில்லை!
ஆனால் ஒரு காலத்தில் அதை வானொலிகள் கொடுத்தன.
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்