திண்டுக்கல், மே 31: திண்டுக்கல் அருகே கடையில் வேலை செய்து கொண்டிருந்த லோடுமேன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் தாடிக்கொம்பு அருணாமீனாட்சி நகரைச் சேர்ந்த சின்னையாவின் மகன் ரமேஷ் (38). இவர் செட்டிநாயக்கன்பட்டி ஈ.பி. காலனி பகுதியில் உள்ள பாலன் பட்டாசு கடை மற்றும் கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் லோடுமேனாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், வழக்கம்போல் கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது ரமேஷ் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
ரமேஷின் திடீர் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழப்புக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தாடிக்கொம்பு மற்றும் செட்டிநாயக்கன்பட்டி பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமர் – திண்டுக்கல் மாவட்டம்
