Tue. Jan 13th, 2026




தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்து ஒடசல்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 94-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியில் பயிலும் ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களும் பள்ளி பயன்பாட்டு பொருட்களும் வழங்கப்பட்டன.

முக்கிய நிகழ்வாக, மாணவர்களுக்கு போதைப் பொருட்களின் தீமைகள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது, மஞ்சப்பை (Cloth Bag) பயன்படுத்துவது அவசியம் என்பன குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கு. மனெஷ் குமார், ஆசிரியர்கள் சி. ஆறுமுகம், ர. புவனா, அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நிர்வாக தலைவர் நா. சின்னமணி ஏற்பாடு செய்தார். ஊர் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

🖋️ செய்திகள்: பசுபதி

By TN NEWS