Sun. Oct 5th, 2025

📰 சிறப்பு அறிக்கை:

கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி.

சென்னை, அக்டோபர் 4:
கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும், எதிர்காலத்தில் இத்தகைய துயரங்கள் மீண்டும் நிகழாதபடி தடுக்கும் நோக்கிலும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உறுதியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“கரூர் துயரம் குறித்து மாண்புமிகு உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது.

கரூரில் நடந்த துயரச் சம்பவத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கியுள்ளோம். தம் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு நான் ஆழ்ந்த வேதனையில் இருக்கிறேன்.

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வு குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அனைத்து மட்டங்களிலும் பொறுப்பை உறுதிசெய்யப்படும்:

பல துறைகளில் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழ்நாடு, இத்தகைய கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும் மாநிலமாக மாறும்.

மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து, ஒரு முழுமையான ‘நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP)’ வடிவமைக்கப்படும்.

இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, முழு இந்தியாவுக்கே ஒரு மாதிரியாக (Model) அமையும்.

இத்தகைய துயரச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல் குற்றச்சாட்டுகள் இல்லாமல், ஒரு நீண்டகால தீர்வை நோக்கிப் பயணிப்போம்.

ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது. நம் மக்களின் உயிரைக் காக்கவும், இனி இத்தகைய துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் எங்கும் நிகழாமல் தடுக்கவும் நாம் ஒன்றிணைய வேண்டும்.”



முதலமைச்சரின் இந்த பதிவு, மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் பலரும், “இது ஒரு பொறுப்பு மிக்க, உணர்வுப்பூர்வமான அரசின் குரல்” என பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

🖊️ அரசியல் & சமூக பிரிவு
செய்தியாளர் தொகுப்பு.

சேக் முகைதீன்

இணை ஆசிரியர்

By TN NEWS