வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் போஜனாபுரம் பகுதியில் சாலை அமைக்க வட்டாட்சியர் ஆய்வு
ஆகஸ்ட் 17, குடியாத்தம்
குடியாத்தம் வட்டம், வருவாய் கிராமமான போஜனாபுரம் – பட்டுவார்பட்டி – காசிமாலா – சரகுப்பம் முதல் சீவூரான்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றது.
இந்த கோரிக்கை, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டங்கள், மக்கள் குறை தீர்வு நாள் மற்றும் ஜமாபந்தி ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, கடந்த 18/07/2025 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, 16/08/2025 அன்று குடியாத்தம் வட்டாட்சியர் திரு. கி. பழநி, நேரில் பார்வையிட்டு ஆவணங்களை ஆய்வு செய்தார். இவருடன் வருவாய் ஆய்வாளர் திரு. புகழரசன், கிராம நிர்வாக அலுவலர் திரு. முத்துகுமார், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மு. சேகர், மோ. பழனிவேலன், சிறீதரன், ராஜி ஆகியோர் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் இணைந்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இவ்வாய்வின் மூலம், சாலை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என விவசாயிகள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்