Thu. Aug 21st, 2025



வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டாரங்களில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டுகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் குடியாத்தம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக, குடியாத்தம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு டாஸ்மாக் மதுபான கடை அருகே சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டபோது பாக்கம் அரசு மதுபான கடை அருகே இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில், இவர்கள் தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு டாஸ்மாக் கடை பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்கள் தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த கோகுல்நாத் (20) – தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் – மற்றும் அவரது உறவினர் சுப்பிரமணி (47) என அடையாளம் காணப்பட்டனர்.

இதையடுத்து, இருவரிடமிருந்து மொத்தம் 11 திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

🖊️ கே.வி. ராஜேந்திரன்
செய்தியாளர், குடியாத்தம் தாலுக்கா

 

By TN NEWS