கடலில் மீன் பிடித்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரத்தாக்குதல்!
நாகை மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், நம்பியார் நகர் – பகுதியைச் சேர்ந்த சந்திரபாபு (60) என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (28), விமல் (26), சுகுமார் (31), திருமுருகன் (31), முருகன் (38), அருண் (27) ஆகிய ஆறு மீனவர்கள் நேற்று (அக். 5) மதியம் 2 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில், அவர்கள் நாகை கடற்கரை எல்லையை கடந்த சில மைல்கள் தூரத்தில் வலை வீசிக் கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். மீனவர்களை மரக்கட்டைகளால் தாக்கி, அவர்களின் படகில் இருந்த மீன் பிடிப்பு சாதனங்களையும், வலைகளையும் பறித்துச் சென்றதாக தகவல்.
இந்த தாக்குதலில் ஐந்து மீனவர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக கரைக்கு கொண்டு வரப்பட்டு, ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை கடலோர போலீசார் சம்பவத்துக்கான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மீனவர்கள் பாதுகாப்பிற்காக இந்திய கடற்படை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
#நாகை #மீனவர்கள் #இலங்கை #கடற்கொள்ளையர்கள் #தமிழ்நாடு #மீனவர்_பாதுகாப்பு #செய்தி
சேக் முகைதீன்
இணை ஆசிரியர்.