Sun. Oct 5th, 2025

தாகத்துக்கு தண்ணீர் கொடுத்த பெண்ணுக்கு

பாலியல் தொந்தரவு – நகை பறித்தவருக்கு 7 ஆண்டு சிறை

தென்காசி, செப் – 21

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததோடு, கம்மல் மற்றும் தாலியை பறித்துச் சென்ற நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்காசி மாவட்டம், கரிவலம் வந்தநல்லூர் அருகே மாங்குடி தேவி ஆற்று படுகையில் கிறிஸ்துராஜபுரம் மாதா கோயில் தெருவை சேர்ந்த மரியராஜ் என்பவரின் மனைவி அமலா புஷ்பம் (வயது 46/2021) தனது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள் அமலா புஷ்பாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர் உடனடியாக அமலா புஷ்பம் தான் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை அவர்களிடம் கொடுத்துள்ளார். தண்ணீரை குடித்த அவர்கள் அமலா புஷ்பாவிடம் பாலியல் தொந்தரவு செய்ததோடு அவர் அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் தாலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.

இது பற்றி கரிவலம்வந்த நல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வேலாயுதபுரம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த டேனியல் பொன்னுதுரை என்பவரது மகன் இமானுவேல் ராஜன் (வயது 18/2021) பெருமாள்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராசையா என்பவரது மகன் வெள்ளத்துரை (வயது 21/2021) இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் முதல் குற்றவாளி இம்மானுவேல் ராஜன் இறந்துவிட்டார்.

இந்த வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜவேலு முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் நீதிபதி பி ராஜவேலு குற்றவாளி வெள்ளத்துரைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில்  அரசு தரப்பு வழக்கறிஞராக மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர்
கவிதா ஆஜராகி வாதாடினார்.

அமல்ராஜ்

தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்.

By TN NEWS