கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த மார்ச் 4 முதல் மார்ச் 9 வரை நடைபெற்ற 45வது மாநில அளவிலான மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாடு அணியின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றும் முதல் நிலை காவலர் பிரகாஷ்,
வட்டு எறிதல் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம்,
ஈட்டி எறிதல் பிரிவில் மூன்றாமிடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.
திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய தலைமை காவலர் வரலட்சுமி,
தடை தாண்டும் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்று வெண்கல பதக்கம் பெற்றார்.
மேலும், கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி குண்டு எறிதல் போட்டியில் நான்காம் இடம் பிடித்தார்.
அத்துடன், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் எழிலரசி மற்றும் திண்டிவனம் காவல் நிலைய காவலர் அன்பரசு ஆகியோரும் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினர்.
மார்ச் 14, வெள்ளிக்கிழமை, பதக்கங்களை வென்ற காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் அவர்களை நேரில் சந்தித்து, பாராட்டு பெற்றனர்.
– விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்: தமிழ். மதியழகன்
