Thu. Mar 12th, 2026

கோவை, மார்ச்:
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் போர்வெல் குடிநீரில் ரசாயன கழிவுகள் கலப்பதாக பொய்யான தகவல் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள குள்ளிய நாயக்கர் மற்றும் மலர்வழி தோட்டம் பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் சில நிறுவனங்கள் ரசாயன தொடர்பான உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள போர்வெல் குடிநீரில் ரசாயனம் கலந்துள்ளதாக கூறி ஒருவர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு குடிநீர் பாட்டிலை கொண்டு வந்து அதில் உள்ள திரவத்தை போர்வெல் நீர் என கூறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அந்த பாட்டிலில் இருந்தது ஹைட்ரோகுளோரிக் அமிலம் என்று கூறி, இது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு என எம்.கே. இண்டஸ்ட்ரீஸ் ஓனர் அசோசியேசன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பொய்யான தகவல் பரப்பியவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

நமது சிறப்பு நிருபர்

By TN NEWS