Mon. Apr 13th, 2026

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திற்குட்பட்ட பாடிப்பள்ளம் கிராமத்தில் பணியாற்றி வந்த கிராம நிர்வாக அலுவலர் (VAO) சிங்காரவடிவேல், பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5,000 லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

நடுநெல்லிமலை கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (22) என்பவர், தனது பாட்டி காந்தாமணி 2000 ஆம் ஆண்டு தானமாக பெற்ற 77 சென்ட் நிலத்தின் பட்டா பெயரை தனது பெயருக்கு மாற்ற, கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பட்டா பெயர் மாற்ற செயல்முறைக்காக பாடிப்பள்ளம் கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகிய போது, VAO சிங்காரவடிவேல் ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கநாதன், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், ஏப்ரல் 10ஆம் தேதி திட்டமிட்டு நடத்தப்பட்ட சோதனையில், பாடிப்பள்ளம் VAO அலுவலகத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டிருந்த சிங்காரவடிவேலை, மறைந்து இருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையை, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சரவணன் தலைமையில் ஆய்வாளர் ஈஸ்வரி, சக்கரபாணி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு மேற்கொண்டது.

கைது செய்யப்பட்ட VAO மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் செஞ்சி வட்டார வருவாய் துறை ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதன்மை செய்தியாளர்: தமிழ். மதியழகன்

By TN NEWS