பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று (நவம்பர் 6) காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. மொத்தம் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், மாநிலம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1,500 துணை ராணுவப் படை கம்பெனிகள் உட்பட மொத்தம் 4.5 லட்சம் பாதுகாப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று மட்டும் 3.75 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கு உரிமையைப் பயன்படுத்த உள்ளனர்.
இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 122 தொகுதிகளில் தேர்தல் நவம்பர் 11ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதி நடைபெறும்.
இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. எதிர்க்கட்சியான *இந்தியா கூட்டணியில்* ஆர்.ஜே.டி., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்துள்ளன.
மேலும் தேர்தல் வியூகம் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான *ஜன் சுராஜ்* உள்ளிட்ட புதிய கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன.
முதல் கட்டத்தில் 1,314 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். முக்கிய வேட்பாளர்களில், இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் ராகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சதீஷ் குமார் களமிறங்கியுள்ளார்.
துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தாராபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் தன்னுடைய புதிய கட்சியிலிருந்து மஹுவா தொகுதியில் களமிறங்கியுள்ளார்.
சட்டம்-ஒழுங்கு சவாலாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள 16 தொகுதிகள் அதிக பாதுகாப்புடன் கண்காணிக்கப்படுகின்றன. இதற்கிடையில், இரண்டாவது கட்டமாக போட்டியிடும் பரசத்தி தொகுதியில் ஒன்றிய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் மருமகள் ஜோதி மஞ்சி நேற்று பிரசாரத்தின் போது தாக்குதலுக்கு உள்ளானார்.
அவரின் வாகனத்தின் மீது கற்கள் வீசப்பட்டதில், ஜோதி மஞ்சி தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் முழுவதும் வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களிக்க வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்,
தமிழ்நாடு டுடே மீடியா நெட்வொர்க்
