Tue. Oct 7th, 2025

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசரை நோக்கி வழக்கறிஞர் ஒருவர் காலணி எறிந்த சம்பவம் நாட்டின் நீதித்துறை வரலாற்றில் கரும்புள்ளி

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நோக்கி ஒரு வழக்கறிஞர் காலணி வீசிய சம்பவம் நாட்டின் நீதித்துறை வரலாற்றில் கரும்புள்ளியாகும். இது அவமானகரமானதும் கண்டனத்திற்குரியதுமான வன்செயலாகும்.

நீதிமன்றம் என்பது சட்டத்தின் உயரிய அவை. மக்கள் நியாயத்தைப் பெறும் கடைசி தலமாக நீதித்துறை விளங்குகிறது. அந்த உயர்ந்த மன்றத்தில் இவ்வாறு ஒழுக்கமற்ற மற்றும் வன்முறையான செயலில் ஈடுபடுவது, சட்டத்தையும் ஜனநாயகத்தையும் மதிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வேதனையளிக்கும் ஒன்றாகும்.

சட்டத்துறையைச் சேர்ந்த ஒருவரால் இத்தகைய செயல் நிகழ்த்தப்பட்டிருப்பது மேலும் வருத்தத்திற்குரியது. வழக்கறிஞர் எனும் பதவி பொறுப்புணர்வும், மரியாதையும், தன்னடக்கமும் நிறைந்தது. அந்தப் பொறுப்பை மறந்து இவ்வாறு நடந்துகொள்வது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள இயலாது.

நீதித்துறை மீது நம்பிக்கையைச் சிதைக்கும் எந்தவிதமான செயலையும் கடுமையாக எதிர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. சட்டப்பணியில் ஈடுபடுவோர் தங்கள் கருத்து வேறுபாடுகளை சட்டப்பூர்வமான, ஜனநாயகமான வழிகளில் வெளிப்படுத்துவது தான் தகுந்த நடைமுறையாகும்.

இச்சம்பவத்தை மிகவும் தீவிரமாகக் கண்டிக்கிறேன்.
இந்தச் செயலைச் செய்தவருக்குச் சட்டப்படி தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
நீதித்துறை மரியாதை காத்தல் என்பது ஒவ்வொருவரின் கடமையாகும்; அதனைப் பாதிக்கும் எந்தச் செயலும் எத்தகைய காரணம் காட்டப்பட்டாலும் ஏற்க முடியாது.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
06/10/2025
#Chiefjusticeofindia #SupremeCourt

 

தகவல்: சேக் முகைதீன்

By TN NEWS