Tue. Jul 22nd, 2025

மாணவன் மீது சக மாணவன் கொலை வெறி தாக்குதல்!

பள்ளிப் பிள்ளைகளிடையே பரவும் வன்முறை கலாச்சாரம் பெரும் கவலையளிக்கிறது!

நீதிபதி சந்துரு அறிக்கையை நடைமுறைப்படுத்துவதே தீர்வுக்கு வழிவகுக்கும்!
——————————————————————–
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பு பயிலும் ரஹமத்துல்லா என்கிற மாணவனை அதே பள்ளியில் பயிலும் சக மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளான். தடுக்கப் பாய்ந்த ஆசிரியரையும் வெட்டியுள்ளான். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பள்ளிச் சிறுவன் மீது இன்னொரு சிறுவன் நடத்தியுள்ள இந்தக் கொலைவெறித் தாக்குதல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பள்ளிச் சிறுவர்களிடையே இதுபோன்ற வன்முறைக் கலாச்சாரம்  பெருகிவருவது மிகுந்த கவலையளிக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அந்த இரு மாணவர்களுக்கும் இடையில் பென்சில் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அதனையொட்டி சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவர்களுக்கிடையில் பிரச்சினை உருவாகியிருக்கிறது. அப்போது வகுப்பாசிரியர் அம்மாணவர்களைக் கண்டித்ததோடு அவர்களின்  பெற்றோரையும் பள்ளிக்கு வரவழைத்து நடந்ததைக்கூறி அறிவுறுத்தியும் அனுப்பியுள்ளார்.

ஆனால், இன்று காலை அதே ஆசிரியர் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் போது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவன் ரஹமத்துல்லாவை  வெட்டியுள்ளான். அதனைத் தடுக்க முயன்ற ஆசிரியரையும் வெட்டியுள்ளான்.
வகுப்பறையில் மற்ற மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி பதறிக்  கதறியுள்ளனர். பின்னர் வெட்டிய மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே நெல்லை மற்றும்  தூத்துக்குடி மாவட்டங்களைச் சார்ந்த  பள்ளி மாணவர்கள் நாங்குநேரி சின்னத்துரை, தேவேந்திர ராஜா ஆகியோர் மீது இது போன்ற கொலைவெறித் தாக்குதல்கள்  நடந்துள்ன. தற்போது  பாளையங்கோட்டையிலும்  அதேபோன்ற வன்முறை நடந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக,  தொழில்முறை குற்றவாளியைப் போல அவன் இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறான் என்பதுதான் கூடுதல் கவலையளிக்கிறது.

பள்ளி மாணவர்களே இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு நாம்சார்ந்துள்ள சமூகச் சூழல்களே முதன்மையான காரணிகளாக உள்ளன. சாதியவாத, மதவாத அமைப்புகளும் அதே கருத்தியலைப் பரப்பும் ஒருசில அரசியில் கட்சிகளும் வெளிப்படையாகவே இளம்தலைமுறையினரிடையே “ஆண்ட பரம்பரை, வீரப்பரம்பரை” என்றெல்லாம் திட்டமிட்டே பரப்புரைகளைச் செய்துவருவதும்; அத்தகைய குற்றங்களை ஊக்கப்படுத்துவதும் தாம் பள்ளிச் சிறுவர்களிடையேயும் இதுபோன்ற வன்முறை ஈர்ப்பு உருவாகிறது. மதவெறி- சாதிவெறித் தாக்குதல்களை நடத்தும் வகையிலானத் துணிவையும் தருகிறது.

இதனை “நீதிபதி சந்துரு ஆணையம்” சுட்டிக் காட்டியுள்ளது. எனவே, இச்சூழலில் அந்த விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாதிக்கப்பட்ட பள்ளிச் சிறுவனின் கல்வி பாதிக்காத வகையில் அவனுக்கு உரிய பாதுகாப்பு மற்றும்  கல்வியைத் தொடர்வதற்கு உரிய ஏற்பாடு ஆகியவற்றை அரசு உறுதிசெய்ய வேண்டும்.

பள்ளி மாணவர்களிடையே சகோதரத்துவம் தழைப்பதற்கேற்ற விழிப்புணர்வை உருவாக்கிட
அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும்; அதற்கான தொலைநோக்குடன் கூடிய செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டுனவும் கேட்டுக் கொள்கிறோம். 

இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் – தலைவர்,
விசிக.

நடந்து முடிந்த இந்த சம்பவம் பிண்ணனி மற்றும் பொதுமக்கள் கோரிக்கை…?

நெல்லை ரோஸ்மேரி பள்ளியில் 8ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு – மாணவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதி!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த ரகுமத்துல்லா (வயது 14) என்ற 8ம் வகுப்பு மாணவன், ரோஸ்மேரி பள்ளியில் இன்று காலை வகுப்புத் தொடங்கும் நேரத்தில் சக மாணவரால் அரிவாளால் தாக்கப்பட்டார். மாணவனுக்கு தலையில் பலத்த வெட்டு ஏற்பட்டுள்ளது. கையில் மற்றும் தோள்பட்டையிலும் வெட்டுகள் உள்ளது.

தாக்கிய மாணவன், தன்னுடன் அரிவாளை பாட புத்தகத்தில் மறைத்து கொண்டு வந்து, நேரடியாக தாக்கியுள்ளார். இதைக் கண்ட ஆசிரியை தடுத்த போதும் அவருக்கும் வெட்டு ஏற்பட்டது. தொடர்ந்து மாணவன் ஓடிச் சென்று அருகிலுள்ள காவல் நிலையத்தில் சரண்டர் ஆகியுள்ளார். “ஐயா, நான் ஒருவரை கொலை செய்துவிட்டேன்” என கூறியதோடு அரிவாளையும் ஒப்படைத்துள்ளார்.

ஒரு பென்சிலுக்காக இந்த தாக்குதலா?

இது திட்டமிட்டு செய்யப்பட்ட தாக்குதலாகவே இருக்கக்கூடும் என மக்கள் சந்தேகிக்கின்றனர். 14 வயது சிறுவன் இந்த அளவிலான திட்டத்தை தனக்குத்தானே உருவாக்க முடியுமா என்பதுதான் முக்கிய கேள்வி. பின்னணியில் பின்புல சக்திகள் இருக்கிறதா என்பதை காவல்துறையினரும் சிறப்பு விசாரணைக் குழுவும் கண்டறிய வேண்டும்.

தனியார் பள்ளிகளில் நடைபெறும் ஷாகா நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும் – தமுமுக வலியுறுத்தல்

இதுபோன்ற துடிப்பான வன்முறைகளுக்கு மாணவர்கள் எப்படி இளமையிலேயே உந்தப்படுகிறார்கள் என்பது பற்றி தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் நடைபெறும் ஷாகா, ஆயுத பயிற்சி போன்ற நிகழ்வுகள் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என தமுமுக Nellai மாவட்டத் தலைவர் K.S. ரசூல் மைதீன் வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும். குற்றவாளியின் பின்னணியை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கையாக வைக்கின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் பள்ளி மாணவனுக்கு கொலைவெறி அரிவாள் தாக்குதல்!

பாடப்புத்தகத்துடன் அரிவாள் – வகுப்பறையில் நிகழ்ந்த வன்முறை!

பாளையங்கோட்டை மாடர்ன் ரோஸ்மேரி பள்ளியில் 8ம் வகுப்பு மாணவன் ரஹ்மத்துல்லாஹ் மீது அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவன் அரிவாளால் தாக்குதல்.

தாக்கிய மாணவன் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என தகவல்.

ரஹ்மத்துல்லாஹ் கடந்த மாதம் 10ஆம் தேதி கூட தேவேந்திரராஜா என்பவரால் தாக்கப்பட்டுள்ளார் – இது தொடர்ச்சியான தாக்குதல் என சமூக ஆர்வலர்கள் கண்டனம்.

ஆசிரியர் தடுக்க முயன்றபோது அவரும் வெட்டலுக்கு உள்ளானார்!

மாணவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதி.


சமூக நல்லிணக்கத்தை தக்கவைக்கும் வகையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தனியார் பள்ளிகளில் நடைபெறும் சந்தேகமான இயக்கங்களை அரசு கண்காணிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு நெறிப் போதனை வகுப்புகள் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.

இது போன்ற வன்முறைகளைத் தூண்டும் பின்னணி சக்திகளை அரசு விசாரிக்க வேண்டும்.

அமல்ராஜ் – தென்காசி மாவட்டம்

தலைமை செய்தியாளர்.

By TN NEWS