Fri. May 1st, 2026

திண்டுக்கல் மாவட்டத்தில் நிதி நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே புதூரைச் சேர்ந்த காமாட்சி (27), தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தினசரி வாடிக்கையாளர்களிடம் இருந்து தவணை தொகைகளை வசூல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

சம்பவத்தன்று, அம்பாத்துரை அருகே செட்டியபட்டி சாலையில் உள்ள விஜயநகர் பகுதியில் வசூல் செய்த பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எல்லப்பட்டியைச் சேர்ந்த மோகன்குமார் (26) மற்றும் கலையரசன் (23) ஆகிய இருவரும் முன்கூட்டியே திட்டமிட்டு காமாட்சியின் வாகனத்தை மறித்து நிறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் காமாட்சியை சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த ரூ.7,500 பணத்தை பறித்து தப்பிச் சென்றனர். இந்த திடீர் தாக்குதலில் காமாட்சி காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து காமாட்சி அளித்த புகாரின் பேரில், அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமையில் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், குற்றச்செயலில் ஈடுபட்ட மோகன்குமார் மற்றும் கலையரசன் ஆகிய இருவரையும் போலீசார் விரைவாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் தொடர்பாகவும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட விவரங்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இதுபோன்ற வழிப்பறி சம்பவங்களைத் தடுக்கும் வகையில் அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர்: இராமர்

By TN NEWS